Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Saturday, July 15, 2017

மிஃராஜ் எனும் வின்னுலக யாத்திரை



மிஃராஜ் எனும் வின்னுலக யாத்திரை



நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒரு புறம் வெற்றி மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்றுக் கொண்டிருந்தது .அப்போது நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்ரா எனவும் அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்லாமிய வரலாற்றில் " மிஃராஜ் " எனவும் அறியப்படுகிறது. இந்தப் பயணம் நபித்துவம் பெற்று 11 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் இரவு வேளையில் கஃபாவின் சுற்று சுவராகிய ஹதீம் என்ற இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் அன்னாரின் நெஞ்சு பிளக்கப்பட்டு  ஸம் ஸம் நீரால் கழுவப்பட்டு பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் அது நிரப்பப்பட்டது .இவ்வாறு இதற்கு முன்னர் அன்னாரது வாழ்வில் 3 விடுத்தங்கள் நடைபெற்றிருக்கிறது .மிஃராஜூடைய சந்தர்ப்பத்தில் இறைவனின் அற்புதங்களைக் கானும் வலிமையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் .

அடுத்த கட்டமாக நபி (ஸல்) அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கொண்டு வந்த புராக் எனும் தூய வென்மை நிற வாகனத்தில் ஏறியவராக பைத்துல் மக்திஸை நோக்கி சென்றார்கள் .அங்கு அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள் .முதலாம் வானத்தை அடைந்ததும் அனுமதி பெற்று , அதிலிருந்து ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களை சந்தித்து உரையாடினார்கள் .பிறகு முறையாக ஒவ்வாரு வானத்திலும் அனுமதி பெற்று , இரண்டாம் வானத்தில் யஹ்யா (அலை) அவர்களையும் மூன்றாம் வானத்தில் யூசுப் (அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் ஆறாம் வானத்தில் மூஸா (அலை) அவர்களையும் ஏழாவது வானத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களையும் சந்தித்து உரையாடினார்கள் .அதன் பின்னர் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் பயனித்தார்கள் .அதன் பின்னர் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட அனுமதிக்கப்படாததோர் இடத்திற்கு எழுபதாயிரம் திரைகளை கடந்து நபி (ஸல்) அவர்கள் மாத்திரம் இனையற்ற இறைவனை துனையின்றி சந்தித்தார்கள். அந்த நேரத்தில்தான் ஐங்காலத் தொழுகையும், சூறா பகராவின் கடைசி மூன்று வசனங்களுள் " ஒர் அடியான் எனக்கு இணை வைக்காத காலமெல்லாம் அவனது பாவங்களை மன்னிப்பேன் " என்ற இறைவாக்குறுதியும் அன்னாருக்கு அளிக்கப்பட்டது இப்புனித யாத்திரையின் போதே தான் கட்டளைகளுக்கு வழிப்பட்டவர்களுக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கும் சுவனத்தையும் , தன்னை நிராகரித்து தனது கட்டளைகளுக்கு மாறு செய்தவர்களுக்காக தயார் படுத்தி வைத்திகுக்கும் நரகத்தையும் அதிலுள்ள வேதனைகளையும் அன்னாருக்கு அல்லாஹ் காண்பித்தான். இது சம்பந்தமாக நபியவர்கள் நவின்ற பல பொன் மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பல வியக்கத்தக்க விடயங்களை கண்ட பின் தன் பயணத்தை நிறைவு செய்து கொண்டு மண்ணகம் திரும்பினார்கள்.


  விண்ணுலக யாத்திரைக்கான முக்கிய காரணங்கள் .

நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள் .ஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை சுற்றுப் பிரயாணம் சென்று பார்ப்பதை போன்று அகிலத்திற்கும் தலைவரான அன்னாருக்கு அனைத்தையும் அல்லாஹுத்தஆலா காட்ட விரும்பினான்.

சுவர்க்கம் , நரகம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. சுவனத்தில் பல்வேறு இன்பங்களும் , நரகத்தில் பல வகை துன்பங்களும் இருக்கின்றதென இஸ்லாம் உரைக்கிறது .அதனை கண்கூடாக கண்டவர்கள் யாரேனும் உண்டா ? அல்லாஹ் தனது அன்பு நபிக்கு மாத்திரமாவது காட்டி இருக்கலாமே என்ற ஐயங்களுக்கு தெளிவு கொடுப்பதற்கு நாடினான். யாத்திரை மேற்கொண்ட ஆண்டில் நபி (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அன்னாரின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களும் , அன்பு மனைவி கதீஜா அம்மையாரும் இறையடி சேர்ந்திருந்தார்கள். இதனால் மிக்க மன வருத்தத்துடன் இறைவனை தவிற யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் தனக்கு அயலூரான தாயிப் நகரை நோக்கி ஏகத்துவ பிரச்சாரத்திற்கு சென்றார்கள் .அங்கு சென்ற அவர்களை மனிதாபிமானமின்றி கயவர்கள் கல்லாலும், கடும் சொல்லாலும் கண்மணி நாயகத்தை காயப்படுத்தினார்கள். இவ்வாறு துன்பத்துக்கு மேல் துன்பம் கண்ட தன் அன்பரின் துயர் துடைக்கவே வான லோகம் வரவழைத்து அன்னாரின் இன்னல் நீக்கி இன்பக் கடலில் ஆழ்த்தினான் .

பைத்துல் மக்திஸிலிருந்து விண்ணுலக யாத்திரை . மேற்கொண்ட தன் மர்மம்

அல்லாஹு தஆலா தனது படைப்புகள் அனைத்தையும் பைத்துல் மக்திஸ் இருக்கும் இடத்தில் தான் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான் எனவே நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் ஏனெனில் அப்பூமியில் அன்னாரின் பாதம் பட்ட பரகத்தினால் அவர்களின் உம்மத்தினர் அந்நாளில் படும் கஷ்டங்களை இலகுபடுத்துவான் .இது தவிர அனைத்து நபிமார்களின் ஆத்மாக்களையும் அவ்விடத்தில்தான்
அல்லாஹு தஆலா ஒன்று சேர்த்து வைத்துள்ளான் .எனவே நபி (ஸல்) அவர்களை அங்கு வரவழைத்து அவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஏனைய நபிமார்களின் ஆத்மாக்களை கண்ணியப்படுத்த நாடினான்.

விண்ணுலக யாத்திரை கனவா நிஜமா ?

விண்ணுலக யாத்திரையை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் அது கனவுதான் என்று கூறுகின்றார்கள் .அது கனவல்ல என்று நிரூபிக்கும் ஆதாரங்கள் பல உண்டு.

கனவாக இருந்தால் அது பெறும் அற்புதமாக இருக்காது. காரணம் கனவில் இது போன்ற நிகழ்வை காண்பது நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சாத்தியமே .ஆனால் இஸ்லாம் அதனை மாபெரும் அற்புதமாக முன்வைக்கிறது.

அது கனவாக இருந்தால் அதை மக்கா காபிர்கள் இவ்வளவு கடுமையாக மறுத்திருக்க மாட்டார்கள் .மற்றும் ஈமான் கொண்ட சிலர் மீண்டும் மதமாறியிருக்கவும் மாட்டார்கள்.

"இந்த பயணத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என் கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றார்கள்" என நபியவர்கள் கூறிய வார்த்தை தெளிவாகவே புஹாரி கிரந்தத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறும் நம்பிக்கை அறிவை மிஞ்சியது. அதனால் இஸ்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் என்பது அர்த்தமல்ல .அதே சமயம் சில விடயங்களில் அறிவை தாண்டி நம்பிக்கை முன்னிலைப்படுத்தப்படும். மிஃராஜை அறிவால் அளக்க நினைத்து தட்டுத்தடுமாறி ஈமானை பறிக் கொடுத்தவர்கள் பலர் உண்டு. அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.


 (நவ்பான் நிஸ்தார் )

Sunday, April 30, 2017

அல் பாத்திஹா அத்தியாயம்


அல் பாத்திஹா அத்தியாயம்


திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயத்திற்கு அல் பாத்திஹா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது அல் பாத்திஹா என்பதற்கு தோற்றுவாய் ,துவக்கம் , ஆரம்பம் என்று பொருள் தொழுகையில் இந்த அத்தியாயமே ஆரம்பமாக ஒதப்படுகிறது என்பதால் இதற்கு இப்பெயர் வரலாயிற்று .இந்த அத்தியாயத்திற்கு உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை ) எனும் பெயரும் உண்டு .இந்த அத்தியாயமே குர்ஆன் ஏடுகளில் ஆரம்பமாக எழுதப்படுவதாலும் தொழுகையில் ஆரம்பமாக ஓதப்படுவதாலும் இதற்கு இப்பெயர் வரலாயிற்று என இமாம் புஹாரி (ரஹ்) கூறுகிறார்கள் (இப்னு கஸீர் )

பாத்திஹா ஸுறாவின் வேறு பெயர்கள்

இந்த அத்தியாயத்திற்கு மேலும் பல பெயர்கள் உள்ளன அல் ஹம்த் (புகழ் அத்தியாம்) அஷ்ஷிபா (நிவாரணி) அல் வாகிஆ ( பாதுகாப்பளிப்பது) அல் காபியா (போதுமானது) அசாசுல் குர்ஆன் (குர்ஆனின் அடிப்படை) ஆகிய பெயர்கள் அவற்றில் அடங்குகிறது இதனடிப்படையில்தான் நம்முடைய மூத்தவர்கள், உலமாபெருமக்கள் ஏதேனுமொரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கும் போது அதில் ஒருவர்  "அல் பாத்திஹா " என்று கூற அவருடன் சேர்ந்து மற்றவர்களும்  அல் பாத்திஹா அத்தியாயத்தை ஓதும் வழமை இன்னும் இருந்து வருகிறது

பாத்திஹா சூறாவின் சிறப்பும் அதன் மகத்துவமும்


அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்
நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) “இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)“ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ...

“(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்“ என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?“ என்று கேட்டார்கள். பிறகு, “நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தரவேண்டாமா?“ என்று வினவியபடி என்னுடைய கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முனைந்தபோது நான், (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) “இறைத்தூதர் அவர்களே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!“ என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் “(அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா“ அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும்“ என்று 
கூறினார்கள்

.(சஹீஹ் அல் புஹாரி) 

உபை பின் கஅப் ரலி அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 
கூறினார்கள் தவ்ராத் வேதத்திலோ இன்ஜீல் வேதத்திலோ உம்முல் குர்ஆனைப் போன்றதோர் அத்தியாயத்தை இறைவன் அருளியிதில்லை.அது திரும்பத் திரும்ப ஒதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதாகும் மேலும் அது இறைவனுக்கும் அடியாருக்குமிடையே இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்டதாகும்.  (திர்மிதி, நஸயி)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், ”இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ”இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.
அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, ”உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். ”அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் ”அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்)

ஓதிப்பார்க்க சிறந்த அத்தியாயம்

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார்
நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து “எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?“ என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் “உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?“ அல்லது “ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?“ என்று கேட்டோம். அவர், “இல்லை; குர்ஆனின் அன்னை“ என்றழைக்கப்படும் (“அல்ஃபாத்திஹா“) அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்“ என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் “செல்லும் வரையில்“ அல்லது “சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்“ ஒன்றும் செய்துவிடாதீர்கள்“ என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். “இது (“அல் ஃபாத்திஹா“  ) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள்.
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஸஹீஹ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத்  துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன்.

(ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதி அபூதாவூத்,இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத் ) 

பாத்திஹா அத்தியாயம் தொடர்பாக
அறிஞர்களிடையே நிலவும் கருத்துக்கள் 

இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களும் ஒத்த கருத்துள்ள அவர்களுடைய தோழர்களும் தொழுகையில் அல் பாத்திஹா அத்தியாயத்தைத்தான் ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் குர்ஆனில் எதை ஓதினாலும் செல்லும் என்றும் கூறுகிறார்கள் குர்ஆனில் உங்களுக்கு எது சுலபமானதோ அதை ஓதிக் கொள்ளுங்கள் எனும் (73:20) ஆவது வசனத் தொடரின் பொதுமைக் கருத்தை இவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் மேலும் முறை தவறித் தொழுத ஒருவர் தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் " பின்னர் குர்ஆனில் உமக்கு எது சுலபமாகத் தெரியுமோ அதை ஓதிக் கொள்வீராக என அவரிடம் கூறினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (புஹாரி, முஸ்லிம்)
அவருக்கு நபி (ஸல் ) அவர்கள் உத்தரவிட்டார்களே தவிர குறிப்பாக அல் பாத்திஹாவை ஓத வேண்டும் என்று கூறவில்லை

 மற்ற இமாம்களான மாலிக் , ஷாஃபி , அஹ்மத் , (ரஹ்) ஆகியோர் தொழுகையில் அல் பாத்திஹா அத்தியாயத்தையே குறிப்பாக ஒத வேண்டும் என்றும் அதை ஓதாமல் தொழுகை நிறை வேறாது என்றும் கூறுகின்றனர்  அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அல் பாத்திஹா அத்தியாயம் ஓதப்படாத தொழுகை குறைபாடுள்ளது முழுமை பெறாதது என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்  அத்துடன் அல் பாத்திஹா அத்தியாயத்தை ஓதத் தவறியவருக்கு தொழுகையே கிடையாது (புஹாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸையும், உம்முல் குர்ஆன் (அல் பாத்திஹா ) ஒதப்படாத தொழுகை செல்லாது (ஸஹிஹ் இப்னு ஹுஸைமா ) என்ற ஹதீஸை யும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் இது தொடர்பாக இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன


அடுத்து இமாமைப் பின்பற்றி தொழுகின்றவர் அல் பாத்திஹா அத்தியாயம் ஓதுவது கட்டாயமா? என்பது தொடர்பாக அறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துகள் நிலவுகின்றன
    

1 இமாமைப் போன்றே இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றவரும் அல் பாத்திஹா அத்தியாயம் ஓதுவது கட்டாயமாகும் (இமாம் ,பின் தொடர்பவர்) இருவருக்கும் பொதுவானவை என்பதே காரணமாகும்

2  எல்லாத் தொழுகையிலும் சப்தமிட்டு ஓதப்படும் தொழுகை சப்தமின்றி ஓதப்படும் தொழுகை எதுவாயினும் இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றவர் அல் பாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டியதில்லை யார் இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றாறோ அவருக்கு இமாமின் ஒதலே அவரது ஓதலாகும் (முஸ்னத் அஹ்மத்) என்ற ஹதீஸ் இக்கருத்தாளர்களுக்கு ஆதாரமாகும் .

3   சப்தமின்றி மெதுவாக ஒதப்படும் தொழுகைகளில் இமாமைப் பின் தொடர்ந்து தொழுகின்றவரும் ஓத வேண்டும் சப்தமிட்டு ஓதப்படும் தொழுகையில் ஓத வேண்டியதில்லை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இமாம் ஏற்படுத்தப்பட்டதே பின்பற்றப்படுவதற்காகத்தான் ஆகவே இமாம் (அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் சப்தமிட்டு குர்ஆன் வசனங்களை ஓதினால் நீங்கள் மௌனமாக இருந்து கேளுங்கள் (முஸ்லிம்)
புனித குர்ஆனிலுள்ள மற்ற எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத சில விதிமுறைகள் அல் பாத்திஹா அத்தியாயத்திற்கு இருப்பதாலயே இந்த விளக்கங்களை கூறினோம் . எல்லாம் வல்ல அல்லாஹ்வே மிகவும் நன்கறிந்தவன்  






                                                                                                                                             (சனாஸ் ரியாழி)

Thursday, March 16, 2017

குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களின் பெயர்கள்

 سنن الصيام✍️🌷     -يسن للصائم أن يتسحر؛ لأن في السحور بركة، ونعم سحور المؤمن التمر، ويسن تأخيره، ومن بركة السحور التقوي على طاعة الله وعبا...